சென்னை:

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக பாஜகவிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று பாஜக மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் கூறியதால், அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கை அம்பலமாகி உள்ளது.  இது  அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளனர். இரண்டு கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தெரிவித்து இருந்தன.

தமிழக பாஜகவுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் ஏற்கனவே தமிழக கட்சிகளுடான கூட்டணி பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, கூட்டணி ஒப்பந்ததத்திலும் கையெழுத்திட்டார்.

தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் தமிழக மக்களின் ஒட்டு மொத்த குரலான நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்தும் தெரிவித்திருந்தது.

அதிமுக   கடந்த 8ந்தேதி வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில்,  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,  தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்க ளில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்திருந்தது.

ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளி யிடப்படவில்லை. அதுபோல,  கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்தும் எந்தவித மான  தகவலும் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக சமஸ்கிருதத்தை  பிரபலப்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் செய்தியாளர்கள் சந்தித்தனர். அபோது, நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், அதிமுக நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து தங்களிடம் பேசவில்லை என்று கூறினார். ஆனால், நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக்கொண்டோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தற்கு முரணான தகவலை தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று கூறியவர்,  கூட்டணி கட்சியான அதிமுகவை சமாதானம் செய்வோம் என்றும் பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும் என்றும் கூறினார்.

பியூஸ் கோயலின் அறிவிப்பு மூலம்,  அதிமுக மக்களை ஏமாற்றும் வகையிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று  தங்களது தேர்தல் அறிக்கையில்  கூறிய பொய் அம்பலமாகி உள்ளது.

ஆனால், திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ள தற்கு ஏற்ப, காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்து தெரிவித்து உள்ளது. நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என்றும் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.