கொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது.

பங்களாதேஷ், பூட்டான், நேபாள், இலங்கை உள்ளிட்ட நாடுகள் எல்லாம் இந்தியாவிற்கு உதவவேண்டிய நிலைக்கு தள்ளிய பிறகும் 20000 கோடி ரூபாயில் பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் தயாராகும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணியில் மோடியும் அவரது அரசும் மூழ்கி இருப்பது வேதனையளிக்கிறது.

மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பாகிஸ்தான், காங்கோ, ருவான்டா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் உலக நாடுகளின் உதவியை நாடி நிற்கவேண்டிய நிலைக்கு வந்த பின்னும் அதற்காக இவர்கள் வருத்தப்படுபவர்களாக தெரியவில்லை.

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வரவேண்டும் இல்லையென்றால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் நிலையால் உலகமே சின்னாபின்னமாகிவிடும் என்று யுனிசெப் நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இரண்டாம் அலையிலிருந்து தப்பிப் பிழைக்க உலகம் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் வேலையில் மூன்றாம் அலை குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக-வோ, இந்த எச்சரிக்கை எதையும் பொருட்படுத்தாமல் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்கட்சியினரை வம்புக்கு இழுப்பதையே முழுநேர தொழிலாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

உலகளவில் ஐந்தில் ஒரு பங்கு கொரோனா நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர், கடந்த பத்து நாட்களில் மட்டும் 36,110 பேர் இறந்திருக்கின்றனர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மணி நேரத்துக்கு 150 பேர் இறக்கின்றனர். உயிரிழப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை குறுகிய காலத்தில் கடந்திருப்பது கண்டு உலகமே அச்சமடைந்திருக்கிறது.

பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பை பொருட்படுத்தாமல் இந்தியாவுக்கு பயணம் செய்யவேண்டாம் என்று பல நாடுகள் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

பண்டித நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கிய கட்டமைப்பை கொண்டே நாடு இந்த அசாதாரண சூழலை சமாளித்து வருகிறது..

தற்போதைய இந்த அசாதாரண சூழலை சமாளிக்க தேவையான வளர்ச்சிப் பணிகள், திட்டங்களை வழங்கி மக்களுக்கு நம்பிக்கை வழங்கி காத்து வரும் முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நன்றி என்று சிவசேனா தனது சாம்னா நாளேட்டில் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க தேவையான நாட்டுக்கு உதவக்கூடிய நடவடிக்கையை அரசியல் சார்பற்று தேசிய உணர்வோடு சிந்தித்து பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கும் சாம்னா மோடி அரசு திறமையற்ற வகையில் செயல்படுவதாக வெகுவாக வறுத்தெடுத்திருக்கிறது.