சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் நேரு பூங்காவில் இருந்து, சென்னை திரிசூலம் அருகே உள்ள விமான நிலையம் வரை நேரடி மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும்  விமான பயணிகளின் வசதிக்காக நேரு பூங்காவில் இருந்த விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டது. பின்னர் தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது.

சென்னை கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை நேரடி சேவை தொடங்கப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும்  ரயில்கள்  அனைத்தும் விமான நிலையம் வரை இயக்கப்பட்டு வந்தது.  ஆலந்தூரில் லூப் லைன் வசதி செய்யப்பட்டுள்ளதால் நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் நேரடி சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.

கோயம்பேடு வழித்தடத்தில் இருந்து வரும் ரயில்களில் சில  ரயில்களை விமான நிலையம் வரை இயக்கவும் மற்ற ரயில்களை வழக்கம் போல் பரங்கிமலைவரை இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 40 நிமிடங்கள் ஆகும் என்றும்,  இதற்கு கட்டணமாக  ரூ.54 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.