காத்மண்டு
சீன மொழியான மாண்டரினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குச் சீனா ஊதியம் வழங்க உள்ளதால் அம்மொழி நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆகி உள்ளது.
சீன மொழிகளில் ஒன்றான மாண்டரின் மொழியை வடக்கு மற்றும் தென்மேற்கு சீனாவில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கும் சீன மொழிக்கும் வித்தியாசம் மிக மிகக் குறைவாகும். இதைச் சீன மொழியின் ஓசை வடிவம் எனவும் ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த மொழியை பீஜிங் மற்றும் ஷாங்காய் நகர மக்களில் பெரும்பாலானோர் பேசி வருகின்றனர். சிங்கப்பூர் மற்றும் தைவான் நாடுகளிலும் மாண்டரின் பேசப்படுகிறது.
நேபாள நாடு தற்போது சீனாவுக்குப் பல விதங்களில் ஆதரவு அளித்து வருகிறது. சீனா அமைக்கும் பொருளாதார சாலைக்கு நேபாளம் மிகவும் ஆதரவு அளித்து வருகிறது. இது இந்தியாவை ஒட்டி செல்வதால் இந்தியா எதிர்த்து வருவதால் நேபாளம் இந்தியாவின் பல நடவடிக்கைகளையும் எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் மாண்டரின் மொழியைக் கற்பிக்கும் நேபாள ஆசிரியர்களுக்குச் சீன அரசு ஊதியம் வழங்க முன் வந்துள்ளது. இதனால் நேபாளத்தில் உள்ள பல பள்ளிகளில் மாண்டரின் மொழி கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டுள்ளது நேபாள நாட்டுக் கல்வி அமைச்சக வழிமுறையின்படி நேபாள பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்க அனுமதி உண்டு. ஆனால் எந்த ஒரு வெளிநாட்டு மொழியையும் கட்டாயப் பாடம் ஆக்கக் கூடாது.
இதை அறிந்தே நேபாளப் பள்ளிகள் மாண்டரின் மொழியை கட்டாயப்பாடம் ஆக்கி உள்ளது. இதற்குக் காரணம் மாண்டரின் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தைச் சீன அரசு அளிக்க முன் வந்துள்ளதால் தான் எனக் கூறப்படுகிறது.
மேலும் நேபாள நாட்டில் இதுவரை வெளிநாட்டு மொழிகள் பள்ளி நேரம் முடிந்த பிறகே கற்பிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மாண்டரின் மொழி பாட நேரத்தில் கற்பிக்கபபடுகிற்து.
இது குறித்து விவரம் அறிந்தும் நேபாள அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.