வாரணாசி: வாரணாசி வந்த நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரை விஸ்வ ஹிந்து சேனா என்ற அமைப்பினர், மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட வைத்துள்ளனர்.
ஹிந்து சேனா அமைப்பினர் தலைவர் அருண் பதாக் என்பவர் இது தொடர்பான வீடியோ காட்சியை முகநூலில் பதிவிட்டு உள்ளார். அந்த  வீடியோ காட்சியை அருண் பதாக் வெளியிட்டதும் இணையத்தில் வைரலானது.
வீடியோவில் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தப்படும் ஒருவர் நதியோரம் உட்கார வைக்கப்பட்டு உள்ளார். நேபாள மொழி பேசும் அவரின் தலை மொட்டையடிக்கப்பட்டு இருக்கிறது. ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டும் ன்று அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார்.
நேபாள பிரதமர் கேபி ஒலிக்கு எதிராக கோஷம் போடுமாறும் அவரை மிரட்டுகின்றனர். அவரும் அவர்கள் சொன்னவாறு கோஷம் போடுகிறார். பின்னர் மொட்டைதலையில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்டுள்ள காட்சிகள் வீடியோவில் காட்டப்படுகின்றன.
முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விடியோ மற்றும் அருண் பதாக் செயல்பாடுகள் அடிப்படையில் வாரணாசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.