காத்மாண்டு: நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைத்ததுடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசந்தாவுக்கும் இடையே அதிகார மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் இந்த மோதல் உச்சகட்டத்தை எட்ட, கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்தது.

கட்சி மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் மெஜாரிட்டியை இழந்தார். இந் நிலையில் இன்று பிரதமர் சர்மா ஒலி அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்து ஆட்சியை தொடர்வதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்து இது தொடர்பாக ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதமும் அனுப்பப்பட்டது.

பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்று முடிவை தெரிவித்தார். பரிந்துரையை ஜனாதிபதி ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். 2021ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து மே 10ம் தேதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.