புதுடெல்லி: இணையசேவை என்பது மக்களுக்கான அடிப்படை உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்.
காஷ்மீரில் இணையசேவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இவ்வாறு பதிலளித்துள்ளது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்.
காஷ்மீரைச் சேர்ந்த சில ஊடக நிறுவனங்கள், காஷ்மீரில் 4ஜி இணைய சேவையின் வேகத்தை, மத்திய அரசு குறைத்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதற்கு பதிலளித்து, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; பயங்கரவாத அமைப்புகள், தங்கள் வன்முறை நடவடிக்கைகளுக்கு இணைய சேவையைப் பயன்படுத்துகின்றன. அதனால் அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இணைய சேவை என்பது அடிப்படை உரிமை வகைப்பாட்டில் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.