கட்டாக்கில் உதித்த அட்டாக்!

* “வந்தேறி
கும்பினியரின்
வாலறுக்க

வாள்வீச்சும்,
வாய்வீச்சும்
போதாதென்ற
 
வங்கத்துச் சிங்கம்
வந்துதித்த நாள் –

ஜனவரி 23!

* ரத்தம்
கொடுங்கள்
சுதந்திரம்
தருகிறேன்
என்றது
 
சுபாஷின்
சுத்த வீரம்!

* ஆம்
‘கட்டாக்’கில் பிறந்த
காளைக்கு

ஆர்வமெல்லாம்
‘அட்டாக்’கில்

அதனால்தான்
போராடி
பெறுவதே
விடுதலை
என்றது
 
போஸின்
போர்க்குணம்!

* சித்தரஞ்சன்தாஸின்
சீரிய
தொண்டனான
நேதாஜி
 
காந்தியின்
அகிம்சை
முடிவுக்கெதிராக
கச்சை கட்டினார்!

அதனால்
காங்கிரசார்
அவரை
கட்டம் கட்டினார்!

* அகில இந்திய
தலைமைக்கு
காந்தி களமிறக்கிய

சீத்தாராமையாவை
நேதாஜி நேர்நின்று
வென்றும்
காட்டினார்!

* ஆனால்
மகாத்மாவோ
 
தனக்கே
தோல்வியென
அறிவிக்க…

வென்றிட்ட
நேதாஜியோ
தலைவர் பதவியை
தூக்கி வீசி

விரக்தியோடு
நடையைக்
கட்டினார்!
* பார்வர்டு பிளாக்
பிறந்தது!
 
பாரதம் மீட்க –
போர் முழக்கம்
எழுந்தது!

* இரண்டாம்
உலகப் போரில்
பாரெங்கும்
பரவிக் கிடந்த

பாரதத்தின்
போர்க் கைதிகளை
திரட்டி

இந்திய தேசிய
ராணுவத்தை
கட்டி எழுப்பினார்…
 
பிரித்தாளும்
பிரிட்டனது
எதிரிகளை
ஒன்று திரட்டினார்

* கொடுங்கோலன்
ஹிட்லரோடும்,

மூர்க்கன்
முசோலினியோடும்
வெள்ளையரை
வீழ்த்த

வியூகம்
கட்டினார்…

பர்மாவில்
இருந்தபடி
பாரதத்தின்
விடுதலைக்கு

பாதை
கூட்டினார்!

* சிங்கப்பூர்
மாநாட்டில்
சீறி ஒலித்தது

சுபாஷின்
சுதந்திரப்
பிரகடனம்!

* ஆனாலும் –
கும்பினியர்
சூழ்ச்சியில்

இந்திய தேசிய
ராணுவம்
இக்கட்டில்
சிக்கியது!

ஜப்பான்
சரணடைய…

“தற்காலிக
தோல்விக்கு
மனச்சோர்வு
வேண்டாம்

நம்பிக்கை
கொள்வீர்” என

வங்கத்துச்
சிங்கத்தின்பேரில்
வந்தது
இறுதி அறிக்கை!

* அதன்பின் –
வானூர்தி
விபத்தில்

மறைந்தார்
நேதாஜி
என்றே
 
வந்ததோர்
இரங்கல்
அறிக்கை!

* அன்றுமுதல்
இன்றுவரை
நேதாஜி
மரணத்தில்

நிச்சயமற்ற
குழப்பங்கள்!
* இன்னும்கூட
இருப்பதாக
எத்தனையோ
செய்திப்
புழக்கங்கள்!

* ஆம்!
மங்காத மாவீரனுக்கு
வந்தநாள்தான்
உண்டு!
சென்ற நாள்
இல்லையே!
 
கவிதை:  சித்ரகுப்தன்