அதெல்லாம் ஒரு “பாதாளஜோதி “காலம்…!

நெட்டிசன் ஈசன் எழில் விஜயன் முகநூல் பதிவு

வீட்டுக் கொல்லைபுறத்தில் கிணற்றை
பார்த்த தலைமுறையோடு இதன் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது..! தஞ்சாவூர் பக்கம் இதை பாதாளகரண்டி என்று சொல்லுவார்கள்
சேலத்தில் பாதாள ஜோதி என்று சொல்வார்கள்..!
அன்று வீட்டில் முக்கியமாக இருந்தது.
இப்போ எங்கோ மூலையில் கிடக்கலாம்..!
கிணற்றில் நீர் இறைக்கும் போது
கயிறு அவுந்து அல்லது அறுந்து
வாளி தண்ணீரில் விழுந்திடும்.
உடனே அம்மா அந்த பால்கார பாட்டி வீட்டுக்குபோய் பாதாள ஜோதி வாங்கிட்டு வா என்று சொல்லுவாங்க…!
கையோட ஒரு பாத்திரத்தை கொடுத்து வாங்கிட்டு வர சொல்லுவாங்க..!
இது எதுக்குமா பாத்திரம் என்று கேட்டால் அது சாங்கியம் என்று சொல்லுவாங்க…!ஒன்றும் புரியாமல் பால்கார பாட்டி வீட்டுக்கு ஓடுவோம் …!
பின்பு தான் தெரிஞ்சுது .
அது சாங்கியமில்ல பாதாளஜோதி கிணத்திற்குள்ள விழுந்துட்டா கைமாத்தா கொடுத்த பாத்திரம் திரும்ப வராதுன்னு…!

அப்படி இது விழுந்து விட்டால் போச்சு..!
கதை கந்தல் அடுத்து இன்னொரு பாதாளஜோதியை தேடி ஓடனும் பத்திரத்தோட. அக்கம்பக்கம் வீட்டுக்கார்ர்கள் எல்லோரும் கிணத்த சுத்தி கூடிருவாங்க வேடிக்கை பார்க்க…!
இதில் சுவாரசியம் என்னனா
இத கிணத்துல விட்டு மெதுவா சுத்தி எடுத்தா புதையல் போல எப்பப்போ விழுந்த பொருளெல்லாம் சிக்கும்
வீட்டில இருக்கும் பெரியவங்க எல்லோரும் சுத்தி நின்னு
இது அப்ப விழுந்தது
இது இப்ப விழுந்தது என
வியப்பு கலந்த மகிழ்ச்சியோட பேசுவாங்க..!
ஒரே சிரிப்பும் கும்மாளமும் தான்.
அப்புறம் வாளி அகப்பட்டால்
மெதுவா தூக்கணும்
சரியா மாட்டலை என்றால் பாதியில் வரும்போது திரும்பி கிணத்துல விழுந்துடும்..!
அதனால பொறுமையா அலுங்காம குலுங்காம தூக்கணும்…!
சில நேரம் வெகு நேரமாகியும் வாளி கிடைக்காது
இருட்டுறதுக்குள்ள வேற திரும்பி கரண்டிய தந்திடனும் இது அடுத்த சாங்கியம்…!
மறுநாள் திரும்ப பாத்திரம் கொடுத்து வாங்கி வந்து தேடலை தொடர வேண்டும்..!
ஆனா பாதாள ஜோதி வீட்டுக்கு கண்டிப்பா ஏதாவது பொருளை மீட்டு கொண்டு வந்து கொடுக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி..!