டில்லி,

புதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதற்கான அச்சிடும் பணி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள  பணப்புழக்கத்தை மேலும் எளிதாக்கும் வகையில் புதிய ரூ200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு  8-ந்தேதி  மத்தியஅரசு பண மதிப்பிழப்பு  அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.

இதையடுத்து நாடு முழுவதும் பணப்புழக்கம் தடை பட்டது. அதைத்தொடர்ந்து புதியதாக ரூ500, ரூ2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து  வங்கி பண பரிவர்த்தனையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஏடிஎம்களில் பணம் சரிவர கிடைப்பதில்லை. இன்னமும் பணத்தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

இதையடுத்து மத்திய அரசு புதிய 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடிவு செய்துள்ளது. இதற்கான அச்சிடும் பணியை  ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பே ரூ200 நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாகவும், அரசு அச்சங்கள் உள்ள  கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் மட்டுமே கிடைக்கும் என்றும், ஏடிஎம்-களில் கிடைக்காது என்றும் ஒரு தகவல் கூறுகிறது.