புதிய பயிர் கொள்முதல் கொள்கை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டில்லி:
மத்திய அரசின் புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் புதிய பயிர் கொள்முதல் கொள்கையை வெளியிட்டார். அப்போது, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் 22 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்றும், நெல், கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில்,புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக 22 வகை விளைபொருட்களுக்கான உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை அனைவருக் கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த புதிய திட்டத்தினால், மத்திய அரசுக்கு ரூ.40000 கோடி கூடுதல் செலவாகும். வரும் காரிப் பருவ அறுவடைக் காலத்தில் இருந்து இந்த புதிய கொள்முதல் விலை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் விலையை 25 சதவீதம் உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, எத்தனால் விலை ரூ.47.50ல் இருந்து ரூ.52 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது.