சென்னை: தமிழக அரசின் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில், திறந்தவெளியில் உணவு பரிமாறக்கூடாது என்ற உத்தரவிட்டுள்ளது பள்ளிக் கல்வி இயக்குனரகம்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

இதற்காக சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு பள்ளி வளாகத்திலேயே, உணவு தயாரித்து வினியோகம் செய்யப்படுகிறது.

பள்ளி மாணவர்களை, பள்ளி வளாகத்தில் திறந்தவெளியிலும், நடைபாதைகளிலும் அமரவைத்து, சுகாதாரமற்ற மற்றும் முறையற்ற வகையில் மதிய உணவு பரிமாறுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி வகுப்பறை கட்டடங்களில் வைத்து உணவு பரிமாறும்படி இயக்குநரகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறை கட்டடங்கள் அல்லது சேதம் அடைந்த வகுப்பறை கட்டடங்களை செப்பனிட்டு, அவற்றில் வைத்து மாணவர்களுக்கு சத்துணவு பரிமாற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.