டில்லி

ணி இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.

பணி புரியும் இடங்களில் பல பெண்கள் தங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர்.   இவ்வாறு கொடுமைக்குள்ளாகும் பெண்கள் தங்கள் துறைத் தலைவரிடம் இது குறித்து  புகார் அளிக்கின்றனர்.  ஒரு சில வேளைகளில் பெண் ஊழியர்கள் இவ்வாறு சீண்டல் நடத்திய நபர்களிடமே புகார் அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் சிறார் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தை அமல்படுத்தியது.  தற்போது பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அமைக்க மத்திய அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்தது.  இந்தக் குழு மத்திய அமைசர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ரமேஷ் போக்ரியால் மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  இந்த குழு ஒரு புதிய சட்ட வரைவு ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  இந்த வரைவு சட்டம் உருவான பிறகு இது குறித்து பொதுமக்களின் கருத்துக்கு வைக்கப்பட்டு மக்களின் கருத்துக்கிணங்க மசோதாவில் மாறுதல் செய்யப்படும் என தெரிய வந்துள்ளது.

கடந்த 1860 ஆம் வருடம் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தைத் திருத்தும் பணி ஏற்கனவே நடந்துக் கொண்டுள்ளது.  இந்த பணியில் பல ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட மேதைகள்,  மாநில அரசுகள்,  காவல்துறை விசாரணைக்குழு உள்ளிட்ட பலர் இடம் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பணி முடியும் போது அதில் பெண்களுக்குப் பணி புரியும் இடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டம் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.