டில்லி,

ரெயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணி வரம்பு 65ஆக உயர்த்தப்பட்டு ரெயில்வே துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது பொதுவாக 58 ஆக இருக்கும். ஆனால்,ரெயில்வே துறையில் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆகும். ஆனால், நிர்வாகம் விரும்பினால் அவர்களுக்கு மேலும் 2 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கலாம் என்ற விதி ரெயில்வே துறையில் உள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் 62 வயது வரை  பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது இந்த வரம்பு மேலும் 3 ஆண்டுகள் நீடித்து ரெயில்வே வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, ரெயில்வே வாரியம் அனைத்து பகுதி ரெயில்வே பொது மேலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,  “ ஓய்வு பெற்ற ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருந்தால், அவர்களின் பணிக் காலத்தை 2019ம் ஆண்டு, ஜனவரி 12ந்தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்  2018, செப்டம்பர் 14 ந்தேதி வரை பணியில் வைத்து இருக்கலாம் என்று இருந்தது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் என்பது, ஓய்வு பெறும் போது ஒரு ஊழியர் பெற்ற ஊதியத்தில் இருந்து ‘பென்ஷன்’ தொகையை கழித்துக்கொண்டு மீதத் தொகை வழங்கப்படும்.

உதாரணமாக,  ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது ரூ.30 ஆயிரம் ஊதியம் பெற்று இருந்து, ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் பெறுவதாக இருந்தால், அவரை பணியில் அமர்த்தும் பட்சத்தில் ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரம் கழித்துக்கொள்ளப்பட்டு ரூ. 20 ஆயிரம் ஊதியமாக தரப்படும்.