மும்பை
மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை மாநகரம் வளர்ந்து வருவதால் நவிமும்பை என்னும் புதிய மும்பை நகரம் உருவாக்கப்பட்டது. அந்த நவி மும்பை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சர்வதேச விமான நிலையமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விமான நிலையத்துக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் ஒன்றாக பறக்கும் ரெயில் பாதை ஒன்று ரூ.10870 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. சுமார் 49 கிமீ தூரம் உள்ள இந்தப் பாதை மும்பை சி எஸ் டி ரெயில் நிலையத்தில் இருந்து நவி மும்பை விமான நிலையம் வரை அமைக்கப்பட உள்ளது. இந்த பாதை அமைக்கும் பணிகளை மும்பை ரெயில் விலாஸ் கார்ப்பரேஷன் செய்து வருகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர், “ரெயில்வே வாரிய அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு இந்த பறக்கும் ரெயில் பாதை திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாத்ம் இந்த பணிகள் தொடங்கி 2013 ஆம் ஆண்டு முடிக்கப்படும். தற்போதுள்ள பயண நேரமான ஒன்றரை மணி நேரம் இந்த திட்டம் முடிந்த பின் 50 நிமிடமாக குறையும்” என தெரிவித்துள்ளார்.