டில்லி:

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிடும் இணையதளங்களை தடுக்க புதிய மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பைரசி இணைய தளங்கள் கட்டுப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

சமீப காலங்களில் புத்தம் புது திரைப்படங்கள் கூட தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி விடுகிறது. இதன் காரணமாக படத்தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற இணைய தளங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் நாளுக்கு நாள் வெவ்வேறு இணையதளங்களில் இருந்து திரைப்படங்கள் போன்றவை பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இதை தடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், திரை உலகை சேர்ந்தவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கும் புதிய மசோதா உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரைப்பட சட்டம்-1952-ன் 7-வது பிரிவின் படி திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியிடப் பட்டால்,  அபராதம் விதிக்க மட்டுமே வகை செய்கிறது.  இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும் நோக்கில், புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது.

அதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளி யிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

இந்த வரைவு மசோதா குறித்து 14-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.