டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விவரத்தை குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது: லாக்டவுன் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.  மாநில அரசுகள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கட்டணம் பெறப்பட்டது.

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது. ஆனால், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.