சென்னை: உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வாழ் உயிரின காட்சியகங்களுக்கான உலகளாவிய அமைப்பில், சென்னையின் வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த உலகளாவிய அமைப்பானது சுருக்கமாக WAZA என்று அழைக்கப்படுகிறது.

இந்த உறுப்புத்துவ அங்கீகாரத்தின் வாயிலாக, சர்வதேச அளவில் வன உயிரின துறையில் புகழ்பெற்ற நிபுணர்களை இந்த அண்ணா உயிரியல் பூங்கா கவர்ந்திழுக்க முடியும். இதன்மூலம் உலகளவிலான ஒரு சிறப்பு ஆதரவு தளத்தையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அங்கீகாரத்தின் மூலமாக, பூங்காவின் எதிர்கால தேவைக்காக புதிய வியூகங்கள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புதிய உறுப்புத்துவ கவுரவத்தின் மூலமாக, வன உயிரினங்கள் தொடர்பான உலகளாவிய அமைப்புகளான ஐயூசிஎன், சிஐடிஇஎஸ் மற்றும் சிபிடி ஆகியவற்றோடு தொடர்புகளை வளர்த்துக்கொண்டு பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.