டில்லி

மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் விமானப் பயணம் தொடங்கினால்  இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது.  கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் இருமுறை நீடிக்கப்பட்டது.  தற்போது மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  நேற்று பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுவதாக அறிவித்த போது பலரும் மே 18 முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படும் என எண்ணி இருந்தனர்.

ஆனால் பிரதமர் மோடி நான்காம் கட்ட ஊரடங்கு விதிகள் புதுமையானதாக இருக்கும் எனக் கூறி ஊரடங்கு நீட்டிப்பை உறுதி செய்துள்ளார்.

எனவே வரும் 18 ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டாலும் அப்போது பயணிகளுக்கும் விமான நிலைய நிர்வாகத்துக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.   இது குறித்து விமானப் பயண அமைச்சகம் விமான சேவை நிறுவனங்களிடம் இந்த கட்டுப்பாடுகள் குறித்த பட்டியலை அளித்து யோசனைகள் கேட்டுள்ளது.

இந்த பட்டியலில் விமான சேவை நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகம் மற்றும் பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்  :

பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்து இருக்க வேண்டும்.  இந்த செயலியில் பச்சை நிறம் காட்டாதவர்கள் விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

செக் இன் முழுவதும் இணையத்தின் மூலம் மட்டும் நடைபெறும்.

விமான கதவுகள் புறப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு திறக்கப்படும்.

பயணிகள் கையில் எந்த ஒரு லக்கேஜும் எடுத்துச் செல்லக் கூடாது.

பதிவு செய்யப்படும் லக்கேஜ் ஒன்று மட்டுமே அனுமதிக்கப்படும்.

80 வயதுக்கு மேற்பட்டோர் மிக மிக அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

விமானத்துக்குள் உணவு தடை செய்யபட்டுள்ள்து.

பயணம் முழுவதும் முகக் கவசம் அணிவதும்,, காலணிகளையும் மூடி வைப்பதும் அவசியமாகும்.

இவற்றைப் பின்பற்றாத பயணிகளுக்கு விமானத்தில்  ஏற அனுமதி மறுக்கப்படும்.

விமான நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள்:

குழுவில் எப்போதும் மாற்றம் செய்யக் கூடாது.

விமான நிலையத்தில் செக் இன் நடந்தால் புறப்பாட்டுக்கு  மூன்று மணி நேரம் முன்பு தொடங்க வேண்டும்.

விமானம் ஏறும் முன்பு பயணிகள் உடல் வெப்ப நிலையைச் சோதிக்க வேண்டும்.

விமானத்தில் உணவு, பத்திரிகை, செய்தித்தாள்கள் அளிக்கக் கூடாது.

கடைசியில் சில வரிசை இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும்.

விமான நிலைய நிர்வாகத்துக்கான கட்டுப்பாடுகள் :

 கூடியவரை சென்டிரலைஸ்ட் ஏர் கண்டிஷனுக்கு பதில் திறந்த காற்று வென்டிலேட்டர்கள் பயன்படுத்த வேண்டும்.  மிகவும் தேவைப்பட்டால் ஏசி பயன்படுத்தலாம்.  ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை காற்று சுழற்சியை மாற்றுவதும் ஃபில்டர்களை அடிக்கடி மாற்றுவதும் அவசியமாகும்.

அனைத்து பகுதிகளையும் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

சாமான் எடுத்துச் செல்லும் வண்டிகள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சமூக இடைவெளி விதிகளை பின்பற்றும்படி இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.