டில்லி:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பார்போர் வாங்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, நாட்டின் அரசு மற்றும் பொதுசேவை துறைகளில் பணியாற்றும்  அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற ஊழல் கண்காணிப்பு துறையின் அனுமதி அவசியமாகும்.

இதன் காரணமாக, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள  அரசு அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது போன்ற புதிய விதிமுறைகளை மத்திய அரசு  வகுத்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்த வழிகாட்டு விதி முறைகளை பணியாளர் அமைச்சகம் இறுதி செய்துள்ளது.

இந்த புதிய விதிப்படி,  விண்ணப்பதாரர் மீது வழக்கு நிலுவையில் இருந்தாலோ, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப் பட்டிருந்தாலோ பாஸ்போர்ட்டுக்கு அனுமதி மறுக்கப்படும்.  குற்றச்சாட்டுகளில் சிக்கும்  அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் வழங்கப்படாது.

அதே நேரத்தில்,  மருத்துவ சிகிச்சை போன்ற  அவசரகால தேவைக்கு குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், அதை பரிசீலித்து  பாஸ்போர்டுக்கான அனுமதி வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.