லண்டன்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கும் நிலையில் பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரசின் புதிய தொற்று மிகுந்த வேகத்துடன் சுற்றிச் சுழன்று வருகிறது. இதனால் மீண்டும் பல்வேறு ஊரடங்கு உத்தரவுகளை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸ் முந்தைய வைரஸ்களை விட கூடுதல் வீச்சுடன் வேகமாகப் பரவி நவம்பர் மாதத்தில் பரவல் அதிகரித்து டிசம்பரில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 14ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி முழுவீச்சில் மக்களுக்குக் கிடைக்கும் வரை ஊரடங்குகள் தொடரும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறிப் பரவி வருவதாக எச்சரித்துள்ள பிரிட்டன் அரசு மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் பொது இடங்களில் நடமாடுவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படுகின்றன.

இதனிடையே இங்கிலாந்தின் கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம் , இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளன.

பல ஐரோப்பிய நாடுகளில் விமான பயணத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் இங்கிலாந்தில் உள்ள லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனைக்குப் பின் தங்கள் நாட்டுக்கு திரும்பும்படி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

சில அண்டை நாடுகள் ரயில் சேவையையும் நிறுத்தியுள்ளன. பிரான்ஸ் யூரோஸ்டார் சுரங்க ரயில் சேவையையும் நிறுத்த முடிவு செய்துள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சாலைப் போக்குவரத்துக்கும் தடை செய்து எல்லைகளை சீல் வைத்துள்ளன