வாஷிங்டன்

கொரோனா எதிர்ப்புச் சக்தி பல வருடங்களுக்கு உடலில் நீடிக்கும் என ஒரு புதிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா தொற்று ஒரு முறை ஏற்பட்டால் உடலில் அதற்கான எதிர்ப்புச் சக்தி உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.   இது குறித்து நடந்த இரத்த பரிசோதனையில் அதிக வலுவான கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த எதிர்ப்புச் சக்தி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பது தெரியாமல் இருந்தது.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் பாதிக்கப்பட்டோரின் இரத்த மாதிரி ஆய்வுகளில் அவர்களிடம் கொரோனா எதிர்ப்புச் சக்தி இன்னும் வலுவுள்ளதாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   இந்த பரிசோதனையை மேலும் தீவிரமாக்கி உள்ள விஞ்ஞானிகள் இது குறித்த அறிக்கையை விஞ்ஞான இதழ்களில்; வெளியிட்டுள்ளனர்.   கொரோனா தொடங்கி சுமார் 1 வருடம் மட்டுமே ஆகி உள்ளதால் இந்த தகவல்கள் முழுவதுமாக நிரூபிக்கப்படவில்லை.

பொதுவாக எதிர்ப்புச் சக்திகள் செயல்படுவது அவற்றின் நினைவாற்றலை பொறுத்ததாகும்.   அம்மை நோய் எதிர்ப்புச் சக்தி பல்லாண்டுகள் நினைவாற்றலுடன் உள்ளதால் அந்த நோய் முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது.   ஆனால் சாதாரண ஜலதோஷம் போன்ற நோய்களின் எதிர்ப்பு சக்தி குறைந்த நினைவாற்றலைக் கொண்டது என்பதால் அடிக்கடி மக்கள் ஜலதோஷம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இதைப் போல் சார்ஸ் வைரசால் தாக்கப்பட்டோரிடம் உள்ள எதிர்ப்பு சக்தி கடந்த 17 வருடங்களாக வலுவாக உள்ளது.  இந்த வைரஸும் கோவிட் 19 போன்ற வைரஸ் ஆகும்.  இந்த இரு வைரசுக்கும் ஒரே குணம் உள்ளதால் கொரோனா வைரஸ் எதிர்ப்புச் சக்தியும் பல்லாண்டுகளுக்கு நீடிக்கும் என ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.   இந்த எதிர்ப்புச் சக்தி மேலும் வலுவுள்ளதாகத் தென்படுவதால் இந்த எதிர்ப்புச் சக்தி மேலும் பல பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கலாம் என நம்பப்படுகிறது.