பீஜிங்

சீன அரசு ஈரானுக்கு புதிய ரெயில் சேவை தொடங்கி உள்ளது, அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அமெரிக்க அரசு சமீபத்தில் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.   அத்துடன் ஈரானுடனான அனைத்து வர்த்தக தொடர்பையும் முறித்துக் கொண்டது.   ஐரோப்பிய நாடுகள் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை.   ஐரோப்பிய நாடுகள் தங்களுடன் உள்ள வர்த்தக உறவை தொடரவில்லை எனில் அந்நாடுகளுடனும் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளப் போவதாக ஈரான் கூறி உள்ளது.

இந்நிலையில் சீனா சமீபத்தில் ஒரு புதிய ரெயில் சேவை ஒன்றை தொடங்கி உள்ளது.   சீனாவில் இருந்து சூரியகாந்தி விதைகள் அந்த ரெயில் மூலம் ஈரானுக்கு அனுப்பப்படும் என அறிவித்துள்ளது.  ஏற்கனவே ஈரானுக்கும் சீனாவுக்கும் வர்த்தக உறவு தொடர்ந்து வருகையில் சீனாவின் இந்த அறிவிப்பு அந்த வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும் சீனாவின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது

சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.   பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க ஆர்வலர் ஒருவர், “கடந்த வருடம் ஈரானில் இருந்து சீனாவுக்கு மற்ற நாடுகளை விட 25% அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள்ளது.  அதே நேரத்தில் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 20% ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இதை மேலும் அதிகப்படுத்தவே இந்த நடவடிக்கை சீனாவால் எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டை தனிமைப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தது.   ஆனால் அதற்கு ஐரோப்பிய நாடுகள் இன்னும் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை.   ஈரானுக்கு தனது ஆதரவை மறைமுகமாக சீனாவும் தெரிவித்துள்ளது.   இதனால் ஈரானை தனிமைப்படுத்த நினைத்த அமெரிக்கா தனிமைப் படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.