ண்டன்

பிரிட்டனில் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் கண்டறியப்பட்டது.  சமீப காலமாக இது வெகு வேகமாக பரவி வருகிறது.  முந்தைய கொரோனாவை விட 70% அதிக அளவில் பரவி வரும் இந்த கொரோனா அச்சத்தால் பல நாடுகள் தங்களின் எல்லைகளை மூடி உள்ளன. ஆயினும் இந்த வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இன்றி உலகெங்கும் பரவி வருகிறது.  இந்த வைரஸால் அதிகம் பாதிப்பு அடைந்து வரும் நாடுகளைப் பற்றி இங்குக் காண்போம்.

பிரிட்டன் : இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் முதலில் கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டனில்கண்டறியப்படது. அதன் பரவல் சிறிது சிறிதாக அதிகரித்து அது கட்டுப்பாடுகளைத் தாண்டி பரவி வருவதாகப் பிரிட்டன் அரசு கலவை தெரிவித்துள்ளது. இதையொட்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது கிறிஸ்துமஸ் கால கட்டத்தில் பிரிட்டனுக்கு வரவும் இங்கிருந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் : இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சோதிக்கப்பட்டு அவருக்குப் பாதிப்பு உறுதி ஆனது,. இதைக் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்வீடன் நாட்டின் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வேறு யாரும் பாதிப்பு அடைந்துள்ளனரா என்பது குறித்து சோதனைகள் நடந்து வருகின்றன.

பிரான்ஸ் : கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரான்ஸ் நாட்டில் இந்த புதிய வைரஸால் பாதிப்படைந்த முதல் நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.  அவர் லண்டன் நகரில் இருந்து வந்த பிரஞ்சு தேச குடிமகன் ஆவார்.  அவர் தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.  மேற்கொண்டு சோதனைகள் நடந்து வருகின்றது

ஸ்பெயின் : இதுவரை 4 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.,  இவர்களில் யாருக்கும் தீவிர உடல்நலக் குறை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் வேகமாகப் பரவும் என்றாலும் இவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதால் பயப்படத் தேவை இல்லை என ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து : இங்கு இதுவரை 3 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்நாட்டுச் சுகாதாரத் துறை கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.   இதில் இருவர் பிரிட்டனில் வசிப்பவர்கள் மற்றும் ஒருவர் பிரிட்டனுக்கு அடிக்கடி செல்பவர் ஆவார்.  இவர்களிடம் தொடர்பில் இருந்தோர் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்ஹ்டபட்டுள்ளனர்.  புது வருடத்தை முன்னிட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ள ஒரே நாடு சுவிட்சர்லாந்து ஆகும்.

டென்மார்க் : இங்கு இதுவரை 9 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  இதனால் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்து : பிரிட்டனுக்குப் பிறகு பாதிப்பு கண்டறியப்பட்ட ஐரோப்பிய நாடாக நெதர்லாந்து உள்ளது.  இந்நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பகுதியில் இதுவரை 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேற்கொண்டு யாருக்கும் இதுவரை பாதிப்பு இல்லை.

ஜெர்மனி : கடந்த 20 ஆம் தேதி அன்று லண்டன் சென்று வந்த ஒரு ஜெர்மன் பெண்மணிக்குப் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.   அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் அதன்பிறகு பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இத்தாலி : லண்டனுக்குச் சென்று விட்டு ரோம் திரும்பிய ஒரு தம்பதிகள் இதுவரை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்

கனடா : நேற்று முன் தினம் கனடா நாட்டில் ஆண்டாரியோ பகுதியில் இருவருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இவர்களுடைய பயண வரலாறு குறித்து எதுவும் இன்னும் தெரியவில்லை. இவர்கள் இருவரும் தற்போது தனிமையில் உள்ளனர்.

ஜப்பான் : கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜப்பானில் உருமாறிய கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் ஐந்து பேர் கண்டறியப்பட்டனர்.  இதையொட்டி பயணங்களுக்கு ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.   வெளிநாட்டினர் யாரும் நாட்டினுள் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.  அவ்வாறு வருவோர் கொரோனா இல்லை என்னும் சான்றிதழுடன் வர வேண்டும் எனவும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

லெபனான் : வெள்ளிக்கிழமை அன்று உருமாறிய கொரோனா வைரஸால் பாதிkkaப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். இவர் லண்டனில் இருந்து வந்தவர் ஆவார். இதையொட்டி அனைத்து பயணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் : கடந்த 24ஆம் தேதி அன்று ஒருவர் பாதிப்படைந்து தனிமையில் உள்ளார்.  மேற்கொண்டு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா : இதுவரை இங்கு இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் பிரிட்டனில் இருந்து திரும்பி வரும போது விமான நிலைய சோதனையில் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இருவரும் தனிமையில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா : இங்கு லண்டனில் இருந்து வந்த இருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தனிமையில் உள்ளனர்.  இதையொட்டி பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா : நைஜீரியாவில் டிசம்பர் 24 அன்று உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர்  கண்டறியப்பட்டுள்ளார்.  ஆனால் பரிசோதனையில் இந்த வைரஸ் பிரிட்டனில் காணப்பட்டதில் இருந்து வேறுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  எனவே மேலும் மாதிரிகள் எடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.