சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்ட சிவபெருமான்

ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளிகொண்ட சிவபெருமான் கோவில் பற்றிய ஒரு செய்தி

துர்வாச முனிவரின் சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தான் இந்திரன். அதைத் திரும்பப் பெறுவதற்காகப் பிரகஸ்பதியின் ஆலோசனையின் பேரில் அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடைந்தனர் தேவர்கள்.

திருமாலைத் தேவர்கள் சரணடைந்து அவரது உதவியுடன் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாகப் பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.

வாசுகி வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களைக் காப்பாற்ற சிவபெருமானை வேண்டினர்.

சிவபெருமான் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தைத் திரட்டி எடுத்து வரக் கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், “”சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் சுவாமி!” என மன்றாடினர்.

உடனே சிவபெருமான் அக்கொடிய ஆலகால விஷத்தினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த அன்னை பார்வதி, சிவபெருமானைத் தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டுச் செல்லாதவாறு, கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் “நீலகண்டன்’ ஆனார்.

விஷத்தைத் தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை’ ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படிச் செல்லும் முன்பு விஷமுண்ட மயக்கத்தில் இத்தலத்தில் அன்னை பார்வதியின் மடியில் தலைவைத்து சற்று இளைப்பாறியதாகச் சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது.

இத்தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், “பள்ளி கொண்டீஸ்வரர்’ எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும்! என்பது நம்பிக்கை.

இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. சிவபெருமான் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். மூலவர் “வால்மீகிஸ்வரர்” என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் இராமலிங்கம் உள்ளது.

இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்குப் பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகர்களுக்குப் பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பக விருட்சமும் உள்ளனர்.

பிரகாரத்தில் விநாயகர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்த ரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

சிவபெருமானைப் பள்ளி கொண்ட கோலத்தில் ஏங்குமே காண இயலாது. ஆனால் அம்மையார் (பார்வதி) மடியில் தலை வைத்துப் படுத்த நிலையில் எம்பெருமான் , ஆந்திராவிலுள்ள சுருட்டபள்ளி எனும் ஊரில் இருக்கும் கோயிலில் காட்சியளிக்கிறார்.

விஷமுண்ட மயக்கத்தில் சிவபெருமான், அம்மை பார்வதியின் மடியில் தலையை வைத்து படுத்திருக்கும் அரிய காட்சியை ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளியில் காணலாம்.