வலதுசாரி சிந்தனையுள்ள பிறநாட்டு அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து இணையதள பிரச்சாரத்தை மேற்கொள்ள அனுராக் தாக்கூர் ஆலோசனை.

தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடங்கள் பலவும் அரசு இயந்திரங்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அரசின் செயல்பாடுகளும் திட்டங்களும் சமூக ஊடங்களில் அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதனை, கட்டுப்படுத்தி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அனைத்து நிலையிலும் கொண்டு வருவதற்காக 9 மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட குழு ஆலோசனை நடத்தி இருக்கிறது.

இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்ம்ரிதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், ஜெய்சங்கர், முக்தர் அப்பாஸ் நக்வி, இணை அமைச்சர்கள் கிரண் ரிஜிஜி, ஹர்தீப் சிங் பூரி, அனுராக் தாக்கூர், பாபுல் சுப்ரியோ மற்றும் சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

2020 ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இவர்களுக்கு பிரதமர் மோடியும் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது.

தரவுகள் எதுவும் இல்லாமல் இணையதள ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரம் மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை “நடுநிலையாக” மாற்ற வேண்டிய பெரும் கடமை அரசுக்கு இருக்கிறது.

இருந்தபோதும், தவறான பிரச்சாரம் என்பதற்கான அளவுகோலை இந்த குழு வழங்க தவறியிருக்கிறது.

எத்தகைய எதிர்மறை கருத்தாக இருந்தாலும் அதனை திறமையாக அரசுக்கு ஆதரவாக மாற்றி சுழலவிடக்கூடிய வல்லவர்களை அடையாளப்படுத்தி, அவர்களிடம் அந்த சவாலான பணியை ஒப்படைக்கவேண்டும் என்று இந்த குழு கூடி முடிவெடுத்திருக்கிறது.

இவர்கள் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில், இணையதள பிரச்சார யுக்தி குறித்த 97 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தயாரித்திருப்பதாக ‘தி நியூஸ் மினிட்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021, இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆலோசனையில் பகிரப்பட்டதாக வெளியாகியிருக்கும் சில முக்கிய தகவல்கள் :

ஸ்ம்ரிதி இரானி :

  • அரசுக்கு எதிரான கருத்துகளை பகிரும் இணையதள பிரபலங்கள் 50 பேரை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
  • அரசுக்கு ஆதரவாக செயல்படும் 50 முக்கிய இணையதள செல்வாக்கு மிக்கவர்களை அடையாளப்படுத்தி, அவர்களுக்கு தேவையான கூடுதல் தகவலை வழங்க வேண்டும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களை தவறாமல் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் வெளிநாடுகளில் நமது அரசு மீது பரப்பப்படும் எதிர்மறை கருத்துகளை நிறுத்துவதோடு, இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா மற்றும் யோகா ஆகியவற்றை பரப்ப வேண்டும்.

அனுராக் தாகூர்

  • வெளிநாடுகளில் உள்ள வலதுசாரி சிந்தனையுள்ள கட்சிகளின் ஆதரவை பெறுவதன் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

குருமூர்த்தி

  • நாம் சொல்லும் செய்தியில், உண்மையுடன் பொய்யையும் இணைத்து திரித்திருக்க வேண்டும்.
  • சாதாரண நேரங்களில் செய்யப்படும் பிரச்சாரம் திட்டமிட்டதாக இருக்கலாம், ஆனால் போக்ரன் அணுகுண்டு வீச்சு போன்று ஒரு தாக்கம் இருக்க வேண்டும் எனும் போது அரசியல் ஆளுமைகளான நிதிஷ் குமார், நவீன் பட்நாயக் போன்றவர்களை பயன்படுத்த வேண்டும்.

அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யவும் கேள்விக்கேட்கவும் பயன்படும் இணையதள ஊடகங்களை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பிரமை பிடித்தவர்கள் போல் இருக்கிறார்கள் என்பது இந்த குழுவில் வழங்க பட்டிருக்கும் ஆலோசனைகள் மூலம் புலப்படுகிறது.

– நன்றி : தி நியூஸ் மினிட் / கேரவன் மேகசின்