ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள் தற்போது மீண்டும் உலோகம் வேயப்பட்ட கவச குண்டுகளை பயன்படுத்த தொடங்கியிருப்பதால், இந்தியப் பாதுகாப்பு படையினருக்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளன.

இதன்மூலம், பயங்கரவாதிகளுடனான சண்டையின்போது, இந்திய தரப்பில் அதிக சேதங்கள் நிகழ்கின்றன. எனவே, இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, பல குறுகியகால மற்றும் நீண்டகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதிகளவிலான பாதுகாப்பு கவசங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறுகியகால தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். நீண்டகால நடவடிக்கை என்பது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் குண்டு தாங்கும் உடைகளை (ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் போன்றவை) மேம்படுத்துவதை உள்ளடக்கும்.

ஜுன் 12ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 5 சிஆர்பிஎஃப் வீரர்களும், 1 மாநில காவல்துறை அதிகாரியும் கொல்லப்பட்டனர்.

இதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், பயங்கரவாதிகள் உலோகம் வேயப்பட்ட கவச குண்டுகளைப் பயன்படுத்தியதால்தான், இந்திய தரப்பில் 6 உயிர்களை இழக்கக் காரணமானது என்ற உண்மை கண்டறியப்பட்டது.