ஆக்லாந்து: விண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து. இரண்டாவது டி-20 போட்டியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அந்த அணி.

டாஸ் வென்று, முதலில் பந்துவீசுவது என்ற விண்டீஸ் அணியின் முடிவு தவறாகிப் போனது.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கப்தில் 34 ரன்களை அடித்தார். டெவான் கான்வே 37 பந்துகளில் 65 ரன்களை அடிக்க, கிளென் பிலிப்ஸ் 51 பந்துகளில் 108 ரன்களை, 8 சிக்ஸர்கள் & 10 பவுண்டரிகள் உதவியுடன் விளாசினார்.

முடிவில், 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, 238 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

பின்னர், மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய விண்டீஸ் அணியில், பொல்லார்டு அடித்த 28 ரன்கள்தான் அதிகபட்சம். பிளெட்சர் 20 ரன்களும், ஹெட்மேய்ர் 25 ரன்களும், மேயர்ஸ் 20 ரன்களும், கீமோ பால் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து, 72 ரன்களில் தோற்றது விண்டீஸ் அணி. இதன்மூலம், தொடரையும் நியூசிலாந்திடம் இழந்தது.