சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும். இன்றும், நாளையும் கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். எனவே, குமரி, மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.