டில்லி

ந்திரயான் 2 திட்டம் முடிவடைந்ததையொட்டி இஸ்ரோ தனது  அடுத்த திட்டங்களைக் கவனிக்கத் தொடங்கி உள்ளது.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிரேட்டர் நிலவைச்  சுற்றி வந்துக் கொண்டுள்ளது.   அதிலிருந்து பிரிந்த விக்ரம் லாண்டர் பகுதி நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் தொடர்பை இழந்தது.  அதன்பிறகு ஆர்பிரேட்டர் அனுப்பிய புகைப்படங்கள் மூலமாக விக்ரம் லாண்டர் நிலவில் தரை இறங்கி உள்ளது தெரிய வந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.  விக்ரம் லாண்டருடன் மீண்டும் தொடர்பைப் புதுப்பிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாசாவின் விண்வெளி அறிக்கையின் படி நிலவுக்கு அனுப்பப்பட்ட 109 விண்கலன்களில் 61 மட்டுமே வெற்றி அடைந்துள்ளன.  அவ்வகையில் சந்திரயான் 2 திட்டமும் வெற்றி  அடைந்ததாகவே கருதப்படுகிறது.   ஆர்பிரேட்டர் இன்னும் 7 வருடங்களுக்கு நிலவைச் சுற்றி வரும் என்பதால் இந்த ஆய்வு மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.   அதே நேரத்தில் இஸ்ரோவுக்கு உள்ள அடுத்த திட்டங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உளன.

அடுத்ததாக இஸ்ரோ தனது ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு  மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.  ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் இதற்குப் பயிற்சி உள்ளிட்ட பல உதவிகளைச் செய்ய உள்ளது.  வரும் 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் விண்வெளி வீரர்கள் குழுவை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப திட்டமி8ட்டுள்ளது.   இதற்கான அனைத்து ஆயத்த வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

அதற்கு முன்பு இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 என்னும் விண்கலம் சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  அடுத்த வருடம் நடைபெற உள்ள இந்த திட்டத்தின் மூலம் விண்வெளியில் உள்ள வேறு கிரகங்கள் பற்றியும் அறிய வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   இந்த விண்கலம் கட்டுமானப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு மீண்டும் சந்திரயான் 3 என்னும் விண்கலத்தை நிலவின் தெற்குப் பகுதிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  இந்த திட்டம் ஜப்பான் நாட்டுடன் கூட்டுறவு முயற்சியாக நடைபெற உள்ளது.    ஜப்பானின் ஹயாபுசா 2 விண்கலம் ஏற்கனவே தனது திட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றி உள்ளது.    ஜப்பான் நாட்டிலிருந்து ராக்கெட் மற்றும் நிலவைச் சோதிக்கும் உபகரணங்களை இஸ்ரோ வாங்க திட்டமிட்டுள்ளது.

இதைத் தவிர வரும் 2030க்குள் இந்தியா தனது முதல் விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க உள்ளது.   இதில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளது.  அத்துடன் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களையும் இஸ்ரோ ஆய்வு செய்ய உள்ளது.   மொத்தத்தில் சந்திரயான் 2 திட்டத்துக்கு பிறகு இஸ்ரோ இனி  மிகவும் பிசியாக இருக்கப் போகிறது எனவே சொல்லலாம்.