மைசூரு: சட்டமன்ற தேர்தலுக்கு மதசார்பற்ற ஜனதாதள தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டுமென கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, “கர்நாடக சட்டசபைக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். எனவே, கட்சித் தொண்டர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த மாதமே தயாராக தொடங்க வேண்டும்.

அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று யாரும் சொல்லக்கூடாது.
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அடுத்த ஆண்டு அல்லது 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து என எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று பேசியுள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் தேவகெளடா கட்சிகளுக்கிடையிலான கூட்டணி ஆட்சியில் பல்வேறு சிக்கல்கள் நிலவும் சூழலில் நிகில் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகில் குமாரசாமி மாண்டியா மக்களவைத் தொகுதியில், அம்ப்ரீஷின் மனைவியும், முன்னாள் நடிகையுமான சுமலதாவிடம் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.