இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தனக்குக் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் நிக்கி கல்ரானி.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவில்

கடந்த வாரம் நான் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டேன். எனக்குத் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தன.

நல்லவேளையாக எனக்கு லேசான பாதிப்பே இருந்தது. தொண்டையில் பிரச்சினை, ஜுரம், நுகர்வு உணர்வும், நாக்கில் சுவை உணர்வும் இல்லாமல் போனது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. ஆனால், தேவையான எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி நான் தேறி வருகிறேன்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளுங்கள்.உங்கள் குடும்பங்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள், நண்பர்களுடன் இணைந்திருங்கள், மனநலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை, பதற்றத்தை உணர்ந்தால் உதவியை நாடுங்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.