மதுரை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை  கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை  தேவாங் கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி,  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார்  ஐந்தாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நிர்மலா தேவியின் போலீஸ் காவல் இன்று மதியம் 2.30 மணியோடு முடிவடைகிறது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 குழுக்களாக பிரிந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நிர்மலா தேவி தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள்.

நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டார். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே  ஆளுநர்  நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானம், நிர்மலா தேவி விவகாரம் குறித்து கடந்த 18-ந் தேதி முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.

பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள், மாணவிகளிடம் 3 நாட்களாக சந்தானம் விசாரணை நடத்தினார். இதையடுத்து சென்னை சென்ற அவர் இன்று காலை மதுரை வந்தார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் 2-ம் கட்ட விசாரணையை இன்று தொடங்கினார்.

அப்போது அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள், நிர்மலா தேவி மீது புகார் தெரிவித்து சந்தானத்திடம் மனுக்களாக அளித்தனர்.

அந்த மனுக்களை மாணவிகளின் சார்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், சந்தானத்திடம் அளித்தார்.  இது குறித்தும் சந்தானம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மேலும் நிர்மலா தேவி யிடம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவும் சந்தானம் திட்டமிட்டு இருக்கிறார்.  நாளை அல்லது நாளை மறுநாள் மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.