சென்னை,

சசி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்அதிமுகவுக்கு வருகிறார், பிரபல டிவி செய்தி வாசிப்பாளரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவருமான நிர்மலா பெரியசாமி.

இன்று மாலை ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து அவரது அணியில் இணைகிறார்.

அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, பன்னீர் செல்வம் குறித்து ஏதோ பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நிர்மலா பெரியசாமியை, முன்னாள் அமைச்சர் வளர்மதியும், சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம் ஆகியோர் கடுமையாக வசை பாடியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தின் இடையிலேயே அதிமுக தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் நிர்மலா பெரியசாமி கூறியதாவது,

இரு அணிகளும் ஒன்றுபட்டுவிடும் என்று காத்திருந்தேன். அம்மாவின் கட்சியை விட்டு வெளியே போகவிருப்பப்படவில்லை என்பதால் யோசித்துக்கொண்டிருந்தேன்.நீண்ட நாட்களாக என் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்த எண்ணத்தை இப்போது எடுக்க இறைவன் வழிகாட்டிவிட்டார் என்றார்..

அதிமுக ஆலோசனை கூட்டத்தில், நான் அமைதியாக பேசிக்கொண்டிருந்தபோது, சி.ஆர். சரஸ்வதி, குண்டுகல்யாணம் ஆகியோர், அதில் குறுக்கிட்டனர். ஓ.பி.எஸ் அண்ணன் நமக்கு எதிரியா என நான் கேட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்கள் என்னை விமர்சனம் செய்தனர்.

ஓ.பி.எஸ் எதிரி இல்லை என்றால், நீங்கள் ஏன் கட்சியில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டார். நீங்கள் யார் என்னைகட்சியை விட்டு வெளியேற சொல்ல என நான் கேட்டேன். அதற்குள், வளர்மதி வந்து என்னை அடக்க பார்த்தார்.

சொந்த தொகுதியில் மக்களால் விரட்டப்பட்ட வளர்மதி என்னை அடக்க முயல என்ன தகுதி யுள்ளது?

அதிமுகவிலுள்ள 90 சதவீதம்பேர் மனப்புழுக்கத்தில்தான் உள்ளனர். பதவி, கவுரவம் என அனைத்து சலுகைகள் கிடைத்தாலும்கூட அதிமுகவிலுள்ள பலரும் மன புழுக்கத்தில்தான் உள்ளனர்.

விரைவில் ஒவ்வொருவராக பன்னீர்செல்வம் அணியில் வந்து இணைவார்கள்.  ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக உள்ளேன்.

மேலும்,  ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு திரும்பினால் அவரையும் சேர்த்தே ஏற்போம் என்று தான் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அப்படியிருக்கும்போது நான் பேசியதில் என்ன தவறு.

நீண்டகாலமாக நான் மன வருத்தத்தில்தான் இருந்தேன். தனிப்பட்ட வகையில் எனக்கு அங்கு தொல்லை இல்லை. ஆனால் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட புழக்கத்தால் நான் அதிமுகவில் மன வருத்தத்தோடுதான் இருந்தேன்.

நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் ஆரோக்கியமாக இல்லை. தவறான இடத்தில் உள்ளமோ என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.