புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் அறிவித்த செலவழித்தலுக்கான ஊக்கப்படுத்தல் அறிவிப்பு தோல்வியடையலாம் என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வு எச்சரிக்கிறது.
ரூ.28000 கோடி என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்ட எல்டிஏ கேஷ் வவுச்சர் திட்டம் தனது இலக்கை அடையாமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், 10%-15% தகுதியுள்ள பணியாட்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறமுடியும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மத்தியில், செலவுசெய்வதை ஊக்குவிப்பதற்காக, விடுப்பு பயண சலுகை பணமாக்கல்/உதவித்தொகை(எல்டிசி/எல்டிஏ) மற்றும் சிறப்பு விழாக்கால முன்பணத் திட்டம் உள்ளிட்டவற்றை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆனால், நிதியமைச்சரின் ரூ.8000 கோடி விழாக்கால முன்பணத் திட்டத்தை எடுத்துக்கொண்டால், தற்போதைய கொரோனா காலத்தில் மிகவும் குறைந்தளவில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், எதிர்பார்த்த அளவில் செலவுசெய்ய தயங்குவார்கள் என்றே கூறப்படுகிறது.
மேலும், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பலவற்றையும் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஒரு அரசு ஊழியர் ரூ.50000 பெறுவதற்கு, தனது பையிலிருந்து ரூ.118000 ஐ செலவழிக்கும் நிலை உள்ளதால், நிதியமைச்சரின் அறிவிப்புகள் எதிர்பாராத வெற்றியை அளிக்காது என்று கூறப்பட்டுள்ளது.