டில்லி
குடியரசுத்தலைவர் வேட்பாளர் யார் என்பதை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என நிதிஷ்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஆனால் இதுவரை ஆளும் கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் யார் வேட்பாளர் என்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஒரே வேட்பாளரை இருதரப்பினரும் ஒத்துக் கொள்ளவில்லை எனில் தேர்தல் நடைபெற்றே ஆக வேண்டும்.
பாஜக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை வேட்பாளர் தேர்வுக்காக அமைத்துள்ளது. ஆனால் அந்தக் குழு யாரைத் தேர்ந்தெடுக்க உள்ளது என்பது பற்றி இன்னும் ஒன்றும் தெரியவில்லை,
பாஜக சார்பில் அதன் பிரதிநிதிகள் இது குறித்து சோனியா காந்தி மற்றும் சீதாராம் எச்சூரி ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள். வேட்பாளர் யார் எனத் தெரியாமல் ஆதரவை தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மற்றும் உள்ள எதிர்க்கட்சிகள் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளது :
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள இந்த சூழ்நிலையில் பாஜக வேட்பாளரை அறிவிக்க இத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. இரண்டு நாட்கள் முன்பு தேர்வுக் குழுவின் அருண் ஜேட்லி தம்மை தொடர்பு கொண்டபோது இன்னும் முடிவெடுக்கவில்லை என்றே கூறினார். ஆளும் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொண்ட பின்னரே எதிர்க்கட்சியினர் தமது ஆதரவை அவருக்கு தெரிவிப்பதா அல்லது தமது சார்பின் ஒரு வேட்பாளரை தேர்வு செய்வதா என்பதை முடிவு செய்யும்.
அதிகபட்சமாக இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் ஆளும் பாஜக தனது வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நிதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தயாராகும் நேரத்தில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ளார்