சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நள்ளிரவுக்கு முன் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் நள்ளிரவுக்கு முன்னரே கரையைக் கடக்கத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது 90 கி.மீ. தொலைவிலுள்ள புயல், மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆகையில், 5 அல்லது 6 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 12 மணிக்கு முன்னரே கரையைக் கடக்கத் தொடங்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் வெளிவட்டம் முதன்முதலாக கடலூரை மாலை 4 மணியளவில் தொட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரிக்கு சற்று வடக்கே கரையை கடக்கும் என்றும் கரையை முழுமையாக கடந்து முடிக்க நள்ளிரவை தாண்டிவிடும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. எனவே, கடலூரில் அதிகபட்சமாக காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.