சென்னை:  நிவர் புயல் கரையை நெருங்கி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவமும் தயார் நிலையில்  வைக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.  மேலும், இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது,   மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
நிவர் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால், சென்னை அருகே உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் மழை நீரால் சூழலப்பட்டு, போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  7 மாவட்டங்களில் பேருந்து, ரயில்6 போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையிலும் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்ட நிலையில், விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது.
புயல் வலுவடைந்து வருவதால் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.  கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.   மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே மீன்பிடிக்க செல்ல தடை போடப்பட்டு இருப்பதுடன், கடலுக்கு சென்ற மீனவர்களும்  உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும்,  கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 புயல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,புயலின் நகர்வு திசையை வானிலை மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது .

தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  ஏரிகளில் இருந்து  தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில்  தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்புகொள்ள தமிழகஅரசு உதவி எண்களையும் அறிவித்து உள்ளன.
மேலும், தேசிய பேரிடர் மீட்புத்துறை, தீயணைப்பு துறை மற்றும் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.  பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை மீட்பதற்காக பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்,  தமிழகம் புதுச்சேரிக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக ராணுவமும் அறிவித்துள்ளது.