சென்னை:  சென்னை மற்றும் கடற்கரை மாவட்டங்களை மிரட்டி வரும நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல  ரயில் சேவைகள்  ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதுபோல தமிழகஅரசின் விரைவு பேருந்து மற்றும்  ஆம்னி பேருந்து சேவைகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 5 கிலோ மீட்டராக அதிகரித்து வருகிறது. இந்த புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும், என்றும் இந்த புயல் நாளை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் ,மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் உழவன் விரைவு ,சோழன் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ரயில்கள் இன்றும், நாளையும், திருச்சிக்கு செல்லும் ரயில் நாளை மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

வண்டி எண் 06865 / 06866 சென்னை எக்மோர் – தஞ்சாவூர் – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06795 / 06796 சென்னை எக்மோர் – திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதியளவு ரத்து செய்யப்பட்ட சேவைகள்: வண்டி எண் 06232 மைசூரு – மயிலாடுதுறை சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளி – மயிலாடுதுறை இடையே நவம்பர் 24-ம் தேதி ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 06188 எர்ணாகுளம் – காரைக்கால் சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளி – காரைக்கால் இடையே நவம்பர் 24-ம் தேதி ரத்து.

வண்டி எண் 02898 புவனேஸ்வர் – புதுச்சேரி சிறப்பு ரயில், சென்னை எக்மோர் – புதுச்சேரி இடையே நவம்பர் 24 அன்று பாதியளவு ரத்தது.

வண்டி எண் 06231 மயிலாடுதுறை – மைசூரு சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி மயிலாடுதுறை – திருச்சி இடையே ரத்து.

வண்டி எண் 06187 காரைக்கால் – எர்ணாகுளம் சிறப்பு ரயில், நவம்பர் 25 அன்று காரைக்கால் – திருச்சி இடையே ரத்து.

வண்டி எண் 02083 / 02084 மயிலாடுதுறை – கோயம்புத்தூர் சிறப்பு ரயில், நவம்பர் 25 அன்று திருச்சி – மயிலாடுதுறை – திருச்சி இடையே ரத்து.

வண்டி எண் 02897 புதுச்சேரி – புவனேஸ்வர் சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி புதுச்சேரி – சென்னை எக்மோர் இடையே பாதியளவு ரத்து .

வண்டி எண் 02868 புதுச்சேரி – ஹவுரா சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி புதுச்சேரி – விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முழு பணத்தையும் திருப்பித் தரப்படும். மின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, ஆட்டோமேட்டிக் ரீஃபண்டு செய்யப்படும்.

ரயில்வே கவுன்ட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, பயணிகள் ரயில் புறப்பட்ட 15 நாட்களுக்குள் ரயில்வே கவுன்ட்டரில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாகக் கால அவகாசம் தளர்த்தப்பட்டுள்ளது.

பாதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு தற்போதுள்ள பணத்தைத் திரும்பப்பெறும் விதிகள் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து

 நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துக்கள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனப்டி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துக்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பஸ் சேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியே பிற மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துக்கள் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிவர் புயல் காரணமாக  , புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், இன்று பிற்பகல் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து  மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.