நெய்வேலி,

நெய்வேலியில் நடைபெற்று வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து, மாதத்திற்கு 26 நாட்கள் வேலை தருவதாக என்எல்சி நிர்வாகம் உறுதி அளித்தது.

இதை ஏற்று என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நாள்கள் குறைக்கப்பட்டதால், கடந்த மாதம் 12ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ பிரிவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதத்திற்கு  26 நாள்கள் மட்டும் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென 19 நாள்களாக அது குறைக்கப்பட்டது.  இதற்கு கண்டனம் தெரிவித்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலக்கரி விற்பனை குறைந்து வருவதால்தான் பணி நாள்கள் குறைத்துள்ளதாக என்எல்சி நிர்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து இரு தரப்பினருக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து  சுமுகமானத் தீர்வு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ்  பெறப்பட்டுள்ளது.