மதுரை:

மிழகத்தில் உள்ள  பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழக அரசு விதிமுறைப்படி மட்டுமே கல்லூரிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கல்லூரிகளின் கல்வி கட்டணம் தொடர்பாக பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மாணவர்கள் 60 ரூபாய் செலுத்தி இளநிலை மற்றும் முதுநிலை விண்ணப்பங்களை பெற்று, ஒரே விண்ணப்பத்தில்  ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை தெரிவித்திருந்தும், விண்ணப்பம் பெற மாணவர்களிடம் 300 ரூபாய் வரை பல கல்லூரிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. அதுபோல ஒரே கல்லூரியில் பல துறைகளுக்கு விண்ணப்பிக்க தனித்தனியே விண்ணப்பம் அளிக்க வற்புறுத்தப்படுவதாகவும், இதுபோன்ற கல்விக்கொள்ளையை தடுக்க கல்லூரிகள் தனித்தனி இணையதள பக்கத்தை உருவாக்கி மாணவர் சேர்க்கை, கல்வி கட்டண விவரங்களை பதிவிட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், விண்ணப்பக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணங்களை கூடுதலாக வசூலிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி பல்கலைக்கழகங்களும், தமிழக அரசு விதித்துள்ள விதிமுறையின்படி கல்லூரிகளிலும் விண்ணப்பம் மற்றும் கல்விக்கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை  ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.