எஸ்.வி. சேகர்

எஸ்.வி சேகரின் முன்ஜாமீன் தரக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும்படியான முகநூல் பதிவு ஒன்றை தனது பக்கத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்தன.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தலைமறைவாகிவிட்டார்.  முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் விண்ணப்பித்திருக்கிறார்.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை

அந்த முன்ஜாமீன் மனுவை எதிர்த்து பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதை அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் துரை அருண் தாக்கல் செய்தார்.

 

இது குறித்துமுரளிகிருஷ்ணன் சின்னதுரையிடம் பேசினோம்.

அவர், “பெண் பத்திரிகையாளர்களின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், தமிழக ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தும் விதமாக இன்னொருவரின் கருத்தை தன சுவற்றில் பதிந்திருக்கிறார் எஸ்,வி, சேகர்.  அவருக்கு முன் பிணை   வழங்கக்கூடாது என   நான் இடையீட்டு மனு தொடுத்தேன். எனது இடையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டதோடு . காவல்துறையிடம் விளக்கம் கேட்டு மனு மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்” என்றார்.