டி.வி.எஸ். சோமு பக்கம்:

“பள்ளிக்கூட சான்றிதழ்ல சாதியை ஒழிச்சா, சாதியே ஒழிஞ்சிரும்” என்று பேசுவோர் பலர். இன்று கௌசல்யாவின் செய்தியாளர் சந்திப்பில் ஊடகர் (!) ஒருவரும் இதே பாணியில் கேட்டார்.

ஆகவே, இந்த மீள் பதிவு:

“பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், “பொருளாதார ரீதியாக நான் வளர்ந்துவிட்டதால் இட ஒதுக்கீட்டு சலுகை தேவையில்லை. என் பிள்ளைகளுக்கு சாதி மதமில்லை என்று குறிப்பிட்டே பள்ளியில் சேர்க்கப்போகிறேன். அப்படியே சான்றிதழும் பெறப்போகிறேன். இதனால் சாதி மதம் ஒழிந்துவிடும். இந்த சமுதாயத்துக்கு என்னாலான உதவி!” என்றார் பெருமையான தொனியில்.

இன்னொரு நண்பர், “இப்படி “புரட்சி” பேசுவது சிலருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. இது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்!” என்றார் பட்டென்று.

மேலும் அவர், “ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைதான் இட ஒதுக்கீடு. அது சலுகை அல்ல! அதற்காகத்தான் சாதிச் சான்றிதழ் பெறப்படுகிறது.

இந்த இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் உருவானது அல்ல. சமூக ரீதியானது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களை , தங்களுக்குச் சமமானவர் என்று முற்பட்ட வகுப்பினர் ஒப்புக்கொள்கிறார்களா…. ?

தவிர இன்று உங்கள் பொருளாதாரம் வளமாக இருக்கலாம். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என உத்திரவாதம் உண்டா? அப்படி இல்லாமல் பொருளாதாரம் கீழ் நிலைக்குச் சென்றுவிட்டால், அப்போது மீண்டும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற வழி உண்டா? கிடையாது!

சாதி சான்றிதழால் சாதி வெறி நிலவில்லை. சமுதாயத்தில்தான் சாதி வெறி நிலவுகிறது .

அதாவது, சமுதாயத்தில் நிலவி வரும், சாதி (சாதீய ஏற்றத்தாழ்வு) என்பது நோய். அந்த நோயைப் போக்கும் மருந்துதான், சாதிவாரி இட ஒதுக்கீடு. அதற்காகத்தான் சாதிச் சான்றிதழ். இதை குறைகூறுவது, “தலைவலி தைலத்திலேயே தலைவலி என்கிற வார்த்தை இருக்கிறது. ஆகவே தலைவலிக்குக் காரணமே, அந்த தைலம்தான்” என்பது போன்ற அறியாமை.

சமுதாயத்தில் முளைத்து கிளத்து நிற்கும் சாதியை ஒழித்துவிட்டால் கல்விச்சாலையில் சாதிச் சான்றிதழ் தேவைப்படாது. அதற்காகப் போராடுவோம்!

உண்மையிலேயே சாதி ஒழிப்பில் தீவிரமாக இருப்பவர் என்ன செய்யலாம்?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து தங்களது வாரிசுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். தாழ்த்தப்பட்டவர்களானால் அதிலும் தாழ்த்தப்பட்டிருக்கும் புதிரை வண்ணார், அருந்ததியினர் இனத்திலிருந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். சாதியை ஒழிக்கும் மிகச் சரியான வழி இதுதான்.

கல்விச் சாலைகளில் சாதியைக் குறிப்பிடுவதைத் தடுக்க இன்னொன்று செய்யலாம். குறிப்பிட்ட சாதி என்பதை எழுதாமல், பிற்படுத்தப்பட்டவர், மிக பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், அட்டவணை இனத்தவர் என்று மட்டுமே குறிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதை நிறைவேற்ற அரசை வலியுறுத்த வேண்டும்.

இதுதான் சாதியை பள்ளியிலிருந்து அகற்ற சரியான வழி.

தற்போதைக்கு இன்னொரு வழி இருக்கிறது. உரிய சாதிச் சான்றதழை முறையாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லை என்கிற நிலையில் பயன்படுத்தாதீர்கள். கல்லூரி அல்லது வேலைக்கு சேர முயற்சிக்கும்போது, சாதிச் சான்றிதழை இணைக்காமல் அனுப்புங்கள். அப்போது இட ஒதுக்கீட்டு உரிமை கிடைக்காது.

இதுதான் சரி.

மற்றபடி ஒட்டுமொத்தமாக என் பிள்ளைக்கு சாதிச் சான்றிதழ் வேண்டாம். ஒதுக்கீட்டு உரிமை வேண்டாம் என்பது – உங்கள் வாரிசாக இருந்தாலும்- அடுத்தவர் உரிமையைப் பறிப்பதே ஆகும். அது சாதியையும் ஒழிக்காது.

ஆகவே சாதியில்லை என்று சான்றிதழ் பெறுவது முட்டாள்த்தனம் மட்டுமல்ல… அயோக்கியத்தனமும்கூட!” – என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் நண்பர்.