சென்னை: தமிழகத்தில், 2 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்றும்,  கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று  தீவிரமடையும் என தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளதால் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு தமிழக தலைமைச் செயலாளர் பேட்டியளித்தார். அப்போது நெறியாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்க அவர் அளித்த பதில்கள் வருமாறு…
மத்திய அரசிடம் இருந்து, பி.எம்.கேர் திட்டம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. தேசிய பேரிடர் திட்டத்தின் கீழ் ரூ.510 கோடியும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.512 கோடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை தமிழகம் பெற்றுள்ளது.
கடன் சுமைதான் காரணமாகவே தமிழகஅரசு கடன் வாங்குகிறது.  மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாக இருப்பதால், அரசு செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனவே கடன் அதிகமாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் இருந்து  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று உச்சம் பெற வாய்ப்பு உள்ளது. அடுத்த 10 நாட்களில், சில மாவட்டங்களில் பாதிப்பு தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதால்,  மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் தொடர்பனா கேள்விக்கு,  தமிழகத்தில் இன்னும் ஆறேழு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்,  திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒரேயொரு சட்டமன்ற கூட்டத்தொடரில்தான் பங்கேற்க முடியும் என்பதால், இதனால்  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவது இல்லை. மேலும் கொரோனா தொற்று காலக்கட்டத்தில், இடைத்தேர்தல் தேவையற்றது என்று தமிழக அரசு கருதுகிறது.  இதுபற்றி ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் தொடங்குமா என்ற கேள்விக்கு,  கடந்த ஜூன் மாதம் நடத்தி இருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்த வாய்ப்பு உள்ளது.