சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பது என்பது 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  யாராலும் அதிமுகவை கிஞ்சித்தும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் எஃகு கோட்டை.

ஏற்கெனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் அதிமுகவில் இடம் இல்லை.  அவர்கள் இல்லாமல் அதிமுக ஆட்சியும், கட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்பதை முதல்வரும் தெளிவுபடுத்தியுள்ளார். இதுவே எங்கள் நிலைப்பாடு. மனிதாபிமானம் அடிப்படையில் சசிகலா நலம் பெற ஓபிஎஸ் மகன் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றார்.