மும்பை: ஐபிஎல் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றமில்லை எனவும், வழக்கம்போல் இரவு 8 மணிக்கே போட்டிகள் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.

இந்தாண்டு நடைபெறவுள்ள 13வது சீசன் ஐபிஎல் போட்டிகளை இரவு 7.30 மணிக்கு துவக்க வ‍ேண்டுமென தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மறுத்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, “ஐபிஎல் போட்டிகள் துவங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வார இறுதி நாட்களில் 2 போட்டிகள் நடத்தப்படாது. ‍ஐபிஎல் இறுதிப்போட்டி மே 24ம் தேதி நடைபெறும்.

‘நோ-பால்’ மூன்றாவது நடுவர் மூலமாக கண்காணிக்கப்படுவது, காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரர் பயன்படுத்தப்படுவது போன்ற புதிய விதிமுறைகள் இந்த சீசனில் அறிமுகமாகின்றன.

ஐபிஎல் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னர், ‘ஆல் ஸ்டார்ஸ்’ போட்டிகள் நடத்தப்படும். ஆனால், அதற்கான இடம் இன்னும் தேர்வாகவில்லை” என்றார் பிசிசிஐ தலைவர்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ம் தேதி துவங்குகிறது மற்றும் வழக்கத்தைவிட 12 நாட்கள் அதிகமாக நடைபெறுகிறது.