புதுடெல்லி: 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதிக்குப் பிறகு வெளியிடப்பட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான அறிவிப்பில், பொதுப்பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வயது வரம்பு, மதிப்பெண் வரையறைகள் தொடர்பான சலுகை விபரங்கள் இடம்பெறவில்லை.

சமீபத்தில், பொதுப்பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கக்கோரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அதன்பிறகு வெளியிடப்பட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான அறிவிப்பில், அதுகுறித்த சலுகைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால், தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

SSC, UPSC, RRB மற்றும் FCI போன்றவற்றுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட் நிலையில், அதில் எந்த சலுகை விபரங்களும் குறிப்பிடப்படாதது குறித்து, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறியபோது, “அது ஒரு நீண்ட செயல்பாடு. எனவே, காலஅவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டு, படிப்படியாகத்தான் அந்த சலுகை விதிமுறைகள் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

– மதுரை மாயாண்டி