சாமி படங்களை பட்டாசுக்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் – விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு
பட்டாசுகளில் சாமி பட ஸ்டிக்கர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சசிகாந்த் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 9 முதல் 10 மணி வரையும் தீபாவளி அன்று பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதுபோலவே கர்நாடகத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசுகளை மக்கள் வெடிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு நகரில் செய்தியாளர்களை சந்தித்த விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சசிகாந்த் ஷர்மா, பட்டாசுகளால் உருவாகும் குப்பைகளில் சாமி படங்கள் இடம்பெற்றிருப்பது இந்து மதத்தின் மீது பக்தி வைத்திருக்கும் மக்களின் மன உணர்வுகளை புண்படுத்துகிறது.
அதனால் பட்டாசுகளில் சாமி படங்கள் ஒட்டி விற்பனை செய்வதை அரசு தடை செய்ய வேண்டும். விரைவில் இதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். சசிகாந்த் ஷர்மாவின் இந்த கருத்தை பஜ்ரங் தள் மற்றும் இந்து ஜக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.