மும்பை: கொரோனா அச்சம் காரணமாக, சில நாட்களில் தொடங்கவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில், வழக்கமான கைகுலுக்கும் நிகழ்வுகள் இடம்பெறாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுவதில், கை குலுக்குவதும் ஒரு முக்கிய காரணியாகக் கூறப்படுகிறது. எனவே, இப்போட்டித் தொடரில், கை குலுக்குவதற்கு பதிலாக, ஒவ்வொரு வீரரும் கை முஷ்டியை மடக்கி தொட்டுக்கொள்ளும் சம்பிரதாயம் பின்பற்றப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது இந்திய சுற்றுப் பயணத்தில், தென்னாப்பிரிக்க அணி, மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி வருகின்ற வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.

மொத்தமாக 11 நாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது தென்னாப்பிரிக்க அணி. தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தாவில் போட்டிகள் நடைபெறுகின்றன.

அதேசமயம், இந்த கைகுலுக்கும் நிகழ்வு தவிர, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு, ரசிகர்களிடம் நடந்துகொள்வது தொடர்பாக வேறு எந்த குறிப்பிட்ட அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.