சென்னை:
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு  உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில்,  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் 4 மாவட்டங்களில் 15 நாட்கள் தீவிர முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த தமிழக அரசு இன்று பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப் படும் என தகவல் வெளியானது.

 தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலினிப்டி,  புதிதாக தொற்று ஏற்பட்ட 1,875 பேரில் 1,407 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் 127 பேரும், திருவள்ளூரில் 72 பேரும் காஞ்சீபுரத்தில் 19 பேரும் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக  சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பொதகவல் பரவி வந்தன. இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பொதுநல வழக்குகளை காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்த போது, வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர்  ஜெயபிரகாஷ் நாராயணனிடம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பி, ஊரடங்கு மேலும் 15 நாட்கள் கடுமையாக்கப்படும் திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசிடம் தகவல் கேட்டு இன்று பதில் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி இன்று வழக்கு விசாரணையின்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை, இபாஸ் சேவையும் நிறுத்தப்பட வில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் அவ்வப்போது முடிவு எடுக்கப்பட்டு வருகிறது  என்று தெரிவித்துள்ளார்.